Saturday, March 20, 2010

காடு வளர்ப்பு மக்கள் இயக்கமாக வேண்டும்

செய்தி நாள்: 30-டிசம்பர்-2009

காடு வளர்ப்பை மக்கள் இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும் என்று காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் சோம.ராமசாமி பேசினார்.

தமிழ்நாடு வனத் துறை வனவியல் விரிவாக்கத் துறை சார்பில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை மரம் வளர்க்கும் தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்குத் தலைமை வகித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் சோம.ராமசாமி பேசியதாவது:

பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன.

காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்வு, புவி வெப்பம் ஏற்பட்டு சில பகுதிகளில் அதிக மழை, சில பகுதிகளில் வறட்சி உருவாகிறது. கடலோரப் பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்படும்போது அலைகளை கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு உண்டாகிறது. புவியைக் காத்தால் தான் உயிரினங்களைக் காக்க முடியும்.

காடு வளர்ப்பு என்பதை ஒரு மக்கள் இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும். தமிழகத்தின் எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், மண்ணின் வகை, அமிலத் தன்மை, வளம் ஆகியவை குறித்த ஆய்வு அறிக்கையை காந்திகிராம பல்கலைக்கழகம் வழங்க முடியும். எந்த மரங்களை நட்டால் வேகமாக வளரும் என்பது குறித்த ஆய்வுக் கட்டுரையையும் தர முடியும் என்றார் துணைவேந்தர் சோம.ராமசாமி.

சென்னை வனவிரிவாக்கத் தலைமை வன பாதுகாவலர் வை.இருளாண்டி பேசுகையில், இந்தியாவில் 33 சதவிகித அளவுக்கு இருந்த காடுகள் குறைந்து தற்போது 22 சதவிகித காடுகள் மட்டுமே உள்ளன. இந்த 11 சதவிகிதத்தை அடைய வேண்டும் என்றால் 54 கோடி மரங்களை நடவேண்டும். வனத்துறை மட்டுமே இந்தப் பணியை செய்ய முடியாது. எனவே ஆளுக்கொரு மரம் நடவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக மதுரை வனவிரிவாக்க அலுவலர் ராஜசேகரன் வரவேற்றார். திருச்சி வனவிரிவாக்க அலுவலர் பா.சொர்ணப்பன் நன்றி கூறினார்.

வனவிரிவாக்கத்தில் நற்பணிபுரிந்து இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷ மித்ரா விருது பெற்ற வனத்துறை அலுவலர் உ.வீரக்குமார் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார்.

Reference:
தினமணி

1 comment:

  1. வணக்கம், நான் மற்றும் எனது நண்பர்கள் சேர்ந்து எங்கள் ஊரில் பொது நிலங்களில் உள்ள கருவேலம் மரங்களை நீக்கிவிட்டு பயன் தரும் மரங்களை நட விரும்புகிறோம். இதற்கு முறையான அனுமதி மற்றும் நிதி வசதி எவ்வாறு பெற வேண்டும் என்பதை கூறுங்கள்

    ReplyDelete