Thursday, March 25, 2010

திரு.லோகநாதன் - கோவையில் மரம் நடும் பேருந்து நடத்துனர்

திரு, எஸ். பாபு எழுதிய இக்கட்டுரை தன்னம்பிக்கை இணையதளத்தின் வழியாக எடுக்கப்பட்ட்டுள்ளது.

செய்தி நாள்: அக்டோபர்-2008

இரண்டு வாரங்களுக்கு முன்பு, கோவையில் “நெருஞ்சி இலக்கிய முற்றம்” என்ற அமைப்பின் சார்பாக ஒரு பாராட்டு விழா நடந்தது. பாராட்டப்பட்டவர்கள் இரண்டு பேர். ஒருவர் பேருந்து நடத்துனர் திரு.லோகநாதன். மற்றவர் தோழர் அறக்கட்டளை என்ற அமைப்பைச் சேர்ந்த திரு. சாந்தகுமார்.

இருவரும் சாதனைகளின் இரு வேறு சிகரங்கள். தனியொரு மனிதராக தமிழ்நாட்டில் இதுவரை முப்பதாயிரம் மரங்களுக்கும் மேலாக நட்டு சாதனை புரிந்திருக்கிறார் லோகநாதன். அவரது முயற்சியைப் பாராட்டி ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. ஊரையே பசுமையாக்குகிறோம் பேர்வழி என்று வெறும் விளம்பரத்திற்காக மரங்களை நட்டு அதை புகைப்படம் எடுத்து செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்திக் கொண்டு, பிசினஸ் நோக்கத்தில் செயல்படும் எந்த ஒரு அமைப்பையும் சாராதவர் இவர் என்பது ஆச்சரியமான தகவல். தன்னுடைய சமூகப்பணிக்கு இவர் உதவி நாடுவது, பள்ளிக்கூட குழந்தைகளிடம் மட்டும் தான். பள்ளிக் கூடங்கள் தோறும் சென்று இயற்கை மற்றும் மரங்கள் சம்பந்தமான காட்சி (Slide show) நடத்துகிறார். பின்னர் ஆர்வமுள்ள மாணவ-மாணவியரைக் கொண்டு அந்தந்தப் பகுதிகளில் மரங்களை நடுகிறார்.

இன்றைய காலகட்டத்தில் “மரம் நடுவது” என்பது பேஷனாகிவிட்டது. மரம் நடு விழாக்களைப் பற்றி நாள்தோறும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஆனால் அந்த மரங்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனவா என்று கேட்டால், இல்லை என்பது தான் உண்மை. ஆனால் லோகநாதன் சற்று வித்தியாசமானவர். எந்த இடத்தில் மரம் நட்டால் அது வளரும் என்பதை முதலில் ஆராய்ந்து இடங்களை தேர்வு செய்கிறார். பின்னர் பள்ளிகூடக் குழந்தைகளைக் கொண்டு அங்கே மரங்களை நட்டு, அந்த மரங்களுக்கு “ப்ரியா புளியமரம்”, “விக்னேஷ் வேப்பமரம்” என்று குழந்தைகளின் பெயரை சூட்டுகிறார். இதனால் இது தங்களுடைய மரம் என்கிற உணர்வும் பொறுப்பும் குழந்தைகளுக்கு வந்து விடுவதால், அவர்களே மரங்களுக்கு பாதுகாப்பு அளித்து, நீருற்றி பராமரிக்கிறார்கள்.

Reference:
தன்னம்பிக்கை இதழ் - ஒரு பாதசாரியின் பயணக்குறிப்பு


4 comments: